|
பொங்கல் திருநாள்
இது சூரியனின் திருவிழா
அறுவடைத் திருநாள், தமிழர் திருநாள், உழவர் திருநாள் என பல பெயர்களில் அழைக்கப்படும் பொங்கல் திருநாள் தமிழர்களின் தனிப் பெரும் விழாக்களில் முதன்மையானது.
தை மாதப் பிறப்பின்போது சூரியனுக்கு படையலிட்டு பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது.
பொங்கல் ஒரு நாள் விழா அல்ல. மொத்தம் 4 நாட்கள் கொண்டாடப்படுகிறது. �முதல் நாள் போகி, இரண்டாம் நாள் பொங்கல், 3ம் நாள் மாட்டுப் பொங்கல். நான்காவது நாளன்று காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
போகியும் இந்திரனும்:
பொங்கல் திருவிழாவின் முதல் நாளான போகியன்று, பழையன கழிதலும், புதியன புகுதலும் நடைபெறும். அதாவது வீட்டை சுத்தப்படுத்தி, வீட்டில் உள்ள பழைய பொருட்களை வீட்டின் �முன் குவித்து அதைத் தீயிட்டுக் கொளுத்தி, அல்லவை அகன்று நல்லவை பெருக கடவுளை வணங்கி வழிபடுவதே போகி எனப்படும்.
போகிப் பண்டிகையன்று இந்திரக் கடவுளை வணங்குவது வழக்கம். இந்த ஆண்டு முழுவதும் மழை நன்றாகப் பெய்து உழவுக்கும், மக்களின் வாழ்வுக்கும் வளம் கிடைக்க வேண்டி இந்திரனை வணங்குவர்.
கிருஷ்ணர் அனுமதித்த வழிபாடு:இதற்குப் பின்னணியில் ஒரு கதையும் உண்டு.
போகிப் பண்டிகையன்று கிருஷ்ணரும், பிற இடையர்களும் கோவர்த்தன் மலையை வணங்கி வழிபட்டனர். இதனால் இந்திரன் கோப�ற்றான். தன்னை வணங்காமல் கோவர்த்தனை வணங்குவதா என்ற எரிச்சலடைந்த இந்திரன், 7 மேகங்களை அனுப்பி மின்னல், இடி மற்றும் கன மழையை உருவாக்கினான்.
இதனால் கிருஷ்ணனுடன் வந்த இடையர்களும், நண்பர்களும் பீதியடைந்தனர்.
ஆனால் கிருஷ்ணன், கோவர்த்தன் மலையை அப்படியேத் தூக்கி குடையாக மாற்றி அதன் கீழ் அனைவரையும் கொண்டு வந்தார். இதன் மூலம் கன மழை, இடி, மின்னலிலிருந்து நண்பர்களையும், இடையர்களையும் காத்தார் கிருஷ்ணன்.
இதைக் கண்டு பயந்துபோன இந்திரன், கிருஷ்ணரிடம் வந்து தன்னை மன்னிக்க வேண்டினான். அதனை ஏற்ற கிருஷ்ணர், இந்திரனை மன்னித்ததோடு போகியன்று இந்திரனை மக்கள் வணங்கலாம் என்று ஆசிர்வதித்தார்.
சூரிய விழா:
போகிக்கு அடுத்த நாள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. சூரியப் பொங்கல் என்றும் இதற்குப் பெயர் உண்டு.
சூரியனுக்கான பிரத்தேயக விழா இது. சூரியனை வணங்கி பொங்கலிட்டு, பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக என்று மனதார வேண்டி பொங்கல் படைப்பர் மக்கள்.
மங்கலத் தை மாதத்தின் பிறப்பை வரவேற்கும் நாள் இது. மாதங்களில் தைக்கு தனி மகத்துவம் உண்டு. சுப காரியங்களை தையில்தான் ஆரம்பிப்பர். தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற சொல் வழக்கு சும்மாவா வந்தது?
வீட்டின் முன் புறமோ அல்லது பின் புறமோ வெட்ட வெளியில் அழகுக் கோலங்கள் போட்டு அதன் நடுவே பொங்கல் பானையை வைப்பார்கள்.
வெறும் உணவுப் பண்டிகையல்ல..
பொங்கல் என்ற வார்த்தைக்கு இரண்டு பொருள் உண்டு. முதல் பொருள், பொங்கல் என்ற உணவின் பெயர். இரண்டாவது, பொங்குதல் அதாவது மங்களம் பொங்கி வீட்டையும், நாட்டையும் வளமாக வைத்திருக்கும் என்ற நம்பிக்கை.
எனவே பொங்கல் திருநாள் வெறும் உணவு பண்டிகையாக மட்டுமல்லாது, வளமையை வரவேற்கும் பண்டிகையாகவும் உள்ளது.
வண்ணக் கோலங்களுக்கு நடுவே புதிய பொங்கல் பானை வைக்கப்படும். மண் பானை அல்லது வெங்கலப் பானையில் பொங்கலிடலாம். பொங்கல் பானையின் கழுத்தில் மஞ்சள் கிழங்கு, இஞ்சி இலைகளை கட்டுவார்கள்.
மங்களத்திற்கும், பசுமை வளமைக்கும் அடையாளமாக இவை கட்டப்படுகின்றன.
அதன் பின்னர் புதுப் பானையில் புது அரிசியிட்டு பொங்கல் வைப்பது தொடங்கும். எங்களுக்கு வளமையும், செழுமையும் கொடுத்த சூரியக் கடவுளே நன்றி என்று மனதுள் வேண்டி பொங்கல் வைப்பார்கள்.
பொங்கல் பொங்கி வரும்போது பொங்கலோ பொங்கல் என பெண்கள் குலவையிடுவார்கள்.
பொங்கலின் இன்னொரு விசேஷம் தித்திக்கும் கரும்பு. வாழ்க்கையில் இனிமையும், மகிழ்ச்சியும் நிலைக்கட்டும் என்பதற்காக கரும்பு இடம் பெறுகிறது.
மாட்டுப் பொங்கல்:
3வது நாள் மாட்டுப் பொங்கல். அதாவது விவசாயிகளுக்கு தோள் கொடுத்து, வருடம் முழுவதும் ஓய்வின்றி உழைத்த மாடுகளுக்கும், கால்நடைகளுக்கும் நன்றி கூறும் திருநாள். இதில், நம் முன்னோர்களின் நன்றி விசுவாசத்தின் நீள, அகலத்தை யோசித்துப் பாருங்கள். எவ்வளவு விசாலமானவர்கள்.
பசு மாடுகளுக்கும், காளை மாடுகளுக்கும் இந்த நாளில் விசேஷ கவனிப்பு கிடைக்கும். வாயில்லா இந்த ஜீவன்கள் தங்களை வருத்திக் நம்மை வளப்படுத்தியதற்காக மாடுகளுக்கு இன்று பொங்கல் வைத்து கொண்டாடுவர்.
மாடுகள் சுத்தாக குளிப்பாட்டப்பட்டு, அதன் கொம்புகளில் வண்ணம் தீட்டி, கழுத்தில் மாலைகள் சூட்டப்பட்டு, புது மணிகள் தொங்க "புது மாப்பிள்ளை, புதுப் பொண்ணு" போல காணப்படும்.
மஞ்சு விரட்டு, ஜல்லிக்கட்டு:
பொங்கல் செய்து அதை மாடுகளுக்குக் கொடுத்த பின்னர் மாடுகளின் ஊர்வலம் கிளம்பும். ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு என கிராமப் பகுதிகளில் பட்டையை கிளப்புவார்கள்.
தமிழர்களின் வீர விளையாட்டாக ஜல்லிக்கட்டு கருதப்படுகிறது. திமிறும் திமில்களைப் பிடித்து காளைகளை அடக்குவார்கள் இளம் காளையர்கள். இதற்கு ஏறு தழுவுதல் என்றும் பெயர் உண்டு.
காளைகளை அடக்கும் காளைகளுக்கு பரிசுகள் மட்டுமல்லாது கன்னியர்களின் கடைக்கண் பார்வைகளும் போனஸாக கிடைக்கும்.
காணும் பொங்கல்:
மாட்டுப் பொங்கலுக்கு அடுத்த நாள் வருவது காணும் பொங்கல். பொங்கல் பண்டிகையையொட்டி உற்றார், உறவினர்கள், நண்பர்களை சந்தித்து மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்வதே காணும் பொங்கல்.
இந்த தினத்தில் அரிசியில் சர்க்கரை பாகை கலந்து உருண்டைகளாக்கி காக்கைகளுக்கு கொடுப்பார்கள்.
பெண்கள்தான் இந்த அரிசி உருண்டைகளை செய்து காக்கைகள் மற்றும் பறவைகளுக்குக் கொடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் சகோதரர்களுக்கும், அவர்களுக்கும் இடையே பந்த பாசம் நீடித்து நிலைக்குமாம்.
கோவில்கள், கடற்கரைகள், பொது இடங்களில் காணும் பொங்கலின்போது மக்கள் கூடுவார்கள். |